Powered By Blogger

Monday 28 October 2013

பசி என்ற உணர்வு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?



பசி என்ற உணர்வு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? 

 

 


நம்மில் பலரின் நேரமும் கடமையும் பணத்தின் பின் தான் ஓடிக்கொண்டுள்ளது. அதுவும் மத்திய தர வர்க்கதில் வீட்டின் காலை நேரத்தின் பரபரப்பு சொல்லி மாளாது. பிள்ளைகளை எழுப்பி பள்ளிக்கு அனுப்பவது முதல் ஆண்களை கிளம்பி அலுவலகம் அனுப்பும் வரை ஒவ்வொரு நொடியும் முக்கியம் தான். இதில் தானும் வேலைக்கு போகும் பெண்கள் என்றால் இன்னும் பாவம்!.

அதிலும் அந்த காலை டிபன் நேரம் இருக்கே.. சீக்கிரம், சீக்கிரம்  நேரம் ஆகிவிட்டது, வேன் வந்து விட போகிறது , அல்லது பெல் அடித்து விட போகிறது - இந்த குரல் உச்சஸ்தாயில் பிள்ளைகளின் காதில் திணிக்கபட்டு கொண்டே இருக்கும். 

ஆணோ, - செய்தி சேனல்களில் கண்ணை நிலைக்க விட்டு அல்லது காதில் செல்போனை வைத்து உம், ஊம் என்று சொல்லிக்கொண்டே தட்டில் இருப்பதை விண்டி, விண்டி உள்ளே தள்ளிக் கொண்டே அப்ப அப்ப திரும்பி குழந்தையின் தட்டை ஒரு பார்வை பார்த்து கொள்ள வேண்டியது.

பெண்ணோ, - உட்கார்ந்து சாப்பிட கூட நேரமில்லாமல் நடந்து கொண்டே அள்ளி அள்ளி போட்டுக்கொண்டு கிளம்புவது.

என்ன சாப்பிட்டோம்? அதன் சுவை என்ன என்பது உண்மையில் முக்கால் வாசி பேருக்கு தெரியாது.

மதியமோ கிடைக்கும் அரை அல்லது ஒரு மணி நேரத்திற்குள் கடமையே என்று கொட்டி கொண்டு விட்டு, ஆண்கள் சிகரட்டும் கையுமாக ஒதுங்கி தம் தம் பிரதாபங்களையும், டேமேஜர்களின் அஷ்டகோணங்களையும், - பெண்கள் அக்கம் பக்க புறணிகளும், -  பிள்ளைகள் விளையாட செல்லும் முன்பே - கடமை அழைக்க ஒட்டி கொண்டு இருந்து விட்டு மாலை ஆனவுடன் அடித்து புடித்து வீடு வந்து சேருவது.

மாலையில் கடைகளும், சமையல் அறைகளும் மற்றும் ஹோம் வோர்க்குகளும், ஒன்று முதல் இரண்டு மணி நேரங்களை சாப்பிட்டு முடிக்க, - அனைவரும் தொலை காட்சி முன் உட்கார்ந்து கொள்வது. ஒருபக்கம் தொலை காட்சி ஓட மறு பக்கம் செல்போனுடன் உறவாட,-  கொஞ்சம் இருப்பவர்கள் லேப்டாப் பொட்டி தட்ட இத்தனை அலப்பறைகளுடன் சேர்த்து இரவு உணவு விழுங்கி தள்ளுவது.

இதற்க்கு நடுவில் இரண்டு, மூன்று டம்ளர் டீ தண்ணி அல்லது காபி தண்ணி ஒன்றிரெண்டு பிஸ்கட்டோ அல்லது பஜ்ஜி போண்டாவோ உள்ளே தள்ள பட்டிருக்க - அன்றைய நாள் முடிவுக்கு வருகிறது.

அடுத்த நாளும் அதற்க்கு அடுத்த நாளும் இதுவே ரிப்பீட்டு எதுவரை? "அப்பீட்டு" ஆகும் வரை.

"அப்பீட்டு" எப்ப வரும்? எங்கேயாவது, எப்பவாது ஏதோ ஒரு சேவை நிறுவனத்தின் ஐடி கார்டு தொங்க, வெள்ளை அங்கி அணிந்து "வாங்க வாங்க பிரீயா.. சுகரு, பீபி, கொலஸ்டிரால் செக் பன்றோம்" னு அழைக்க நாமும் "பிரீ" தானேன்னு கைய நீட்டுவோம் பாருங்க, 'அப்ப வரும்' !
அப்புறம் என்ன?  நாலு மூணு ஆகும், மூணு ரெண்டு ஆகும் கூடவே கொஞ்சம் மாத்திரை அள்ளி போட்டு கொண்டு ஓட வேண்டும்.

வேற வழி வாங்கி வைத்த லோனை கட்ட வேண்டாமா? நம்ம பிள்ளைங்கல்லாம் சாதரான பள்ளியிலா படிக்குது? பணம்! பா பணம்!! கட்டி தான் தீரனும், அதுக்கவாக மூச்சு பிடிச்சு ஓடதான் செய்யணும்.
மூச்சு வாங்கும் கேப்பில் யாருகிட்டாயாவது 'புலம்ப' அவர்களிடம் இருந்து வரும் பதில், "உனக்கெல்லாம் இப்ப தான், எனேக்கெல்லாம் அப்பவே!!" என்று அவங்க சுகர் வாங்கின சாதனையே!!! சொல்லுவாங்க பாருங்க... அப்ப தான் நமக்கு நிம்மதி வரும். கூடவே சொல்லுவாங்க பாருங்க, "இப்ப வர்ற எல்லா உணவும் உரம் போட்டு போட்டு விசமா மாறிடிச்சுங்கணு." அப்போ நினைப்போம், இது நம்ம பிரச்சினை இல்ல, நாட்டு பிரச்சினை போல, எல்லோருக்கும் வர்றது! நமக்குனு!! அந்த நிம்மதியே தனிதாங்க
.
ஆனா, எப்பவாது நம்ம வயதில் இருக்கும் உடல் உழைப்பு செய்கிற - கொத்தனார், எலெக்ட்ரீஷியன் மாதிரி ஆளுங்க மேலே ஏறி, கீழ குதித்து - வேலை செய்யறத பாக்கும் போது வரும் பாருங்க ஒரு டவுட்? "நம்மள மாதிரி தானே இவனுகளும் சாப்பிடுகிரானுங்க, இவனுகளுக்கு பெருசா ஒண்ணும் வரமாட்டுங்கிதே?" அப்படினு தோணும், ஆனா உண்மை என்னனா? நம்ம எள்ளுக்கு எள்ளு தாத்தா சொன்னத நாம கண்டுக்காம விட்டது தான் காரணமுங்க, அது இதுதாங்க...


//குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
கலைஞர் உரை:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.
மு.வ உரை:
முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.//


இதை, மறந்துட்டு அவசர அவசரமாக சாப்பிடுகிறோம். முழுசு, முழுசா முழுங்கிறோம். சீரணம் ஆகும் முன் மறுபடியும் நிரப்பறோம். அப்புறம் ஏன் வராது "அப்பீட்டு" ?. அமிர்தமே, ஆனாலும் பசிக்காமல் புசித்தால், - அது விஷம் தானுங்க..

"ஒரு நாளைக்கு ஒருவேளையாவது பசித்த பின் சாப்பிடுவோமுங்க." .  

Saturday 26 October 2013

பழமொழிகளும் அதன் மருத்துவ குணங்களும்..


பழமொழிகளும் அதன் மருத்துவ குணங்களும்..   



தமிழர்களால் வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் பழமொழிகளால், முந்தைய தமிழ் மக்களின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும், சமுதாயப் பின்னணியையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய பழமொழிகளில் மருத்துவச் செய்திகளும், நோய் ஏற்படாமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கிய வழிமுறைகளும், மற்றும் உணவு மற்றும்  மருந்துப் பொருட்களின் மருத்துவ தன்மைகளும், அதனால் குணமடையக்கூடிய நோய்கள் பற்றிய விபரங்களும் காணக்கிடைக்கின்றன. இத்தகைய மருத்துவப் பழமொழிகள் பெரும்பாலும், மக்களால் சாதாரணமாகப் பேசப்படுவதில்லை. நோய் உண்டான போதும், கேலியாகப் பேசும் போதும் மட்டுமே வெளிவருகின்றன. மக்களின் அனுபவங்களே பழமொழிகள். அரிய மருத்துவச் செய்திகள் அடங்கிய பழமொழிகள் சிலவற்றைக் காண்போம்..
.
1. ”இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு;
கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு

எள், கொள்ளு என்பவை இரண்டும் உணவு வகைகள். எள் என்பது நல்ல சத்துள்ள உணவாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் எள்ளைத் தின்றால் நன்கு உடல் பெருக்கும் என்றும், பருமனான உடலைக் கொண்டவர்கள் கொள்ளைத் தின்றால், உடல் மெலிந்து போதுமான அளவோடு இருக்கும் என்றும் இப்பழமொழி கூறுகிறது.

2. ”ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்

மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது. ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும்.
ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். மூலிகைகளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது. வாதநோய் தொடர்பாக நரம்புக்கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன. இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும் பயன்படுகின்றன. வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது. இத்தகைய மருத்துவகுணம் கருதியே நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்.

3.”வேலம் பட்டை பித்தத்தைப் போக்கும்; ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்

வேலம்பட்டையை இடித்து ஒரு குவளை நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி அரைக் குவளையாக்கித் தினமும் காலை வேளை மட்டும் குடித்துவர பித்த நோய்களான, வயிற்றுப்புண், பித்தமயக்கம், கைகால் குடைச்சல் குணமாகும். ஆலமரத்தின் பட்டையைக் குடிநீராக்கி குடித்து வர வாய்ப்புண், வாய்நாற்றம், சிரங்கு, கரப்பான்படை ஆகியன விலகும் என்கிறது பழமொழி.

4. ”மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்

மாங்காய் என்பது மாங்காய் ஊறுகாயைக் குறிக்கும், மாங்காய் ஊறுகாய் பசியைத் தூண்டுகிறது. எனவே உணவில் மாங்காய் ஊறுகாயைச் சேர்த்துக் கொள்வதால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை இப்பழமொழி விளக்குகிறது.

5. ”ஒரு போது உண்பான் யோகி; இருபோது உண்பான் போகி; முப்போது உண்பான் துரோகி

ஒரு வேளை உணவை உட்கொண்டு ஆழ்ந்த யோகப் பயிற்சி மேற்கொள்வதால், மூளையின் அடிப்பகுதியில் ஹைப்போதாலமஸ் என்னும் அமைப்பிற்குக் கீழே உள்ள சுரப்பியானது நரை திரை நோய்களை அணுக விடாது. இருவேளை உணவை உட்கொள்வதால் வாழ்வு நோயற்று இன்பமுடையதாக இருக்கும். மூன்றுவேளை உணவு கொள்பவர்கள் நோயாளிகளாகவே இருப்பர். அஜீரணம், மலச்சிக்கல், குடல்நோய் போன்றவற்றால் இவர்கள் பாதிக்கப்பட்டு, எந்நேரமும் நோயுடன் போராடி வாழும் நிலையை உண்டாக்கும்.

6. ”அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்

சில குழந்தைகள் பிறக்கும்போதே நோய்களின் அறிகுறியுடன் பிறக்கின்றன. உள்ளங்கை, உள்ளங்கால் பகுதிகள் நீல நிறமாக இருப்பின் குழந்தை செவ்வாப்பு என்னும் நோயால் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். இதற்குரிய மருந்தாகக் கழுதைப் பால் புகட்டப்படுகிறது என்பதனை இப்பழமொழி குறிக்கிறது.

7. ”இருப்பவன் இரும்பைத் தின்பான், போறவன் பொன்னைத் தின்பான்

உடல் இயங்குவதற்கு இரும்புச் சத்து இன்றியமையாதது. இதன் குறைவால் இரத்தச் சோகை என்னும் நோய் ஏற்படுகிறது. எனவே இரும்புச்சத்து அதிகமுள்ள காய் கறி உள்ளிட்ட உணவுப் பொருளை உட்கொள்ளுதல் வேண்டும். போக இச்சையை விரும்புபவர்கள் பொன்னைப் பஸ்பமாக்கி உண்பார்கள். இதனால் நரம்புக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு போன்றவை ஏற்படும்.  இதனைக் குறிக்க, போறவன் பொன்னைத் தின்பான் என்றார்கள்.

8. ”ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

இதனைக் கிராமப்புற மக்கள் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று வழங்குகின்றனர். ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுவே இதன் பொருளாகும். நாட்டுப்புற மருந்துகளில் மூலிகைச் செடிகளும் அவற்றின் வேர்கள் மற்றும் பட்டைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் குறைந்தது ஆயிரம் வேர்களின் பயன்பாடு பற்றி ஒருவன் தெரிந்திருந்தால் மட்டுமே அவன் அரை வைத்தியன் என்ற நிலையைப் பெற இயலும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.

9. ”அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டாளாம்

அரச மரத்தைச் சுற்றிவந்தால் குழந்தைப் பாக்கியம் ஏற்படும் என்று யாரோ கூறக்கேட்ட ஒருத்தி, கணவனுடன் சேராமல், அரசமரத்தை மட்டுமே சுற்றி வந்தாளாம். அரசமரமும், வேம்பும் இணைந்த மரத்தினைச் சுற்றிவர காற்றானது கருப்பையில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை வாய்ந்தது என்பதை அறிந்தே நம் முன்னோர்கள் பிள்ளையார் சிலையை இந்த மரத்தின் கீழ் வைத்தனர். குழந்தைப் பாக்கியமற்ற பெண்கள் கும்பிடுவதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும்.

10. ”ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

ஆலும் என்பது ஆலமரத்தின் விழுதினையும், வேலமரம் என்பது வேப்ப மரத்தின் குச்சியையும், நாலும் என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். இது பொதுமக்கள் அனைவராலும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பழமொழியாகும். ஆலமரத்தின் விழுதினையும், கருவேல மரத்தின் மரக்குச்சிகளையும் நன்கு மென்று பல்விளக்க, பல் நன்கு பளபளப்புடனும், பல் ஈறுகள் நல்ல பலத்துடனும் காணப்படும் என்னும் செய்தி இப்பழமொழியில் விளக்கம் பெறுகிறது.

11. ”பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்

மருத்துவக் குணம் கொண்ட மிளகு நம் உணவில் பயன்படுத்தப்படும் பொருள்களுள் ஒன்றாகும். இந்த மிளகு நஞ்சு நீக்கும் தன்மையுடையது. பகைவர்களின் வீட்டில் உண்ணும் உணவில் விஷம் கலந்திருந்தாலும், பாம்பின் விஷம் தாக்கியவர்களுக்கு விஷத்தின் தன்மையைக் கண்டறிவதற்கும் மிளகு பயன்படுகிறது. பாம்பால் கடியுண்டவருக்கு மிளகின் எரிப்புச் சுவை தெரியாவிட்டால் உடம்பில் விஷம் தாக்கி விட்டதாகக் கூறுகின்றனர்.

12. ”விருந்தும் மருந்தும் மூன்று நாள்

சொந்தக்காரர்கள் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றால் மூன்று நாள் மட்டுமே இருக்க வேண்டும். நீண்ட நாட்கள் இருப்பின் பகையுண்டாகும். மருத்துவரிடம் மருந்து உட்கொள்ளும்போது, ஒரு மருந்தின் ஆற்றல் மூன்று நாட்களுக்குள்ளாக தெரிந்துவிடும். இல்லையேல் மருந்தை மாற்ற வேண்டும் என்கிறது இப்பழமொழி.

13. ”ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ

ஆவாரைப் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து, இடித்து வைத்துக் கொண்டு தேநீர்,   கோப்பித்தூள் இவைகளுக்குப் பதிலாக உபயோகித்து வர உடல் வறட்சி, உடல் நாற்றம், நீரிழிவு நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாக்குவதால், ஆவாரைப் பூவின் மகத்துவத்தைக் குறிக்க வந்த பழமொழியாகும்.
இதுபோன்று ஏராளமான பழமொழிகள் மருத்துவக் குறிப்புகளை உணர்த்தும் நோக்கில் சொல்லப்பட்டுள்ளன. உலகில் வேறெந்த இனத்தாரும் இப்படிச் சொன்னதில்லை என்பது தமிழர்களுக்கு பெருமையான விடயம்.


01 ஜூன் 2012 அன்று  திரு  B.பாலமுருகன் அவர்களால் எழுதப்பட்டு கலைகேசரியில் வெளியான கட்டுரை.
. 

ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 3



ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 3


காலமும் இயற்கையும் எப்போதும் நாம் செய்யும் தவறுகளை மன்னிப்பதில்லை. நாம் செய்தது சரி நாம் தண்டித்து விட்டோம் என்ற பெருமிதம் அடங்கும் முன்பே நம்முடைய நாம் என்ற எண்ணத்தை இயற்கை அழித்து விடும்.

இது இங்கு உண்மையானது.

எண்ணங்களும், உணர்வுகளும், கோவங்களும் தொட்டு தொடர்ந்து பரவ கூடியது. 

லட்சுமணனின் கோவம் சூர்ப்பணகயை அவமான படுத்தியது.
அவளின் கோவமோ கரன் அவன் சகோதரன் மற்றும் மாரீசனையும் பலி கொடுத்து அதோடு ராமனின் வாழ்வின் அழியா களங்கத்தை ஏற்படுத்தியது.

ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள் ராமன் சூர்ப்பணகையின் காதலை ஏற்று கொண்டிருந்தால் கிருஷ்ணன் மாதிரி அல்லது நம்ம முருகன் மாதிரி இருவர் இருபுறமும் நடுவில் ஒருவராக நமக்கு காட்சி அளித்து கொண்டிருந்து இருந்திருப்பார்.

ராவணன் கடல் கடந்து வந்து சீதனம் கொடுத்த நாளை கொண்டாடி கொண்டு இருந்திருப்போம்.

முன்னமே சொன்னது போல ராமனின் சூழ்நிலையும் அதனால் ஏற்பட்ட மனநிலையும் அவனுக்கு சூழ்நிலையை நிதானமாக அணுக முடியாமல் போனது தான் உண்மை.

ராமனின் வரலாறு உண்மை என்ற கோணத்தில் பார்த்தால் எனக்கு தெரிந்து இதான் நம்ம வரலாற்றில் பதிவு செய்த முதல் ஈவ்டீசிங் ஆக இருந்திருக்க கூடும். இந்த வராலாறு போதிக்கும் முக்கியமான உளவியல்களில் இதுவும் ஒன்று.  அது கடவுளே ஆனாலும் அல்லது தன்னிகரற்றவனே ஆனாலும் ஈவ்டீசிங் செய்தால் அதன் பலன் விபரீதமானது. அவன் வாழ்க்கையை புரட்டி போட கூடியது.

இது வரை ராமனின் வாழ்க்கை அவன் உணர்விலும்  அவன் கட்டுபாட்டிலும் இருந்தது. இதற்க்கு இந்த நிகழ்வுக்கு பிறகு அனைத்தும் அவன் உணர்ந்த பெண்களாலே அல்லது அவர்களை சேர்ந்தவர்களாலே கட்டுபடுத்த பட்டது.

மனைவியை காணவில்லை என்றவுடன் ஏற்படும் வெறுமையும் இயலாமையும் ஆற்றாமையும் அதானால் ஏற்படும் கோவத்திலும் லட்சுமணனை பிரியாமல் உடன் வைத்து பிரச்சினையை எதிர் கொள்வது உண்மையில் கவனிக்க வேண்டிய ஒரு உளவியல். இயல்புக்கு மாறிய இந்த பண்பு அவனை பார்த்து அதிசியக்க வைக்கிறது.

யார் செய்தார்கள்?எதனால் இது நடந்தது? எந்த பக்கம் போயிருப்பார்கள்? உண்மையில் அந்த சில மணி துளிகள் அவள் உயிரோடிருப்பாளோ, சித்திரவதையில் சிக்கி வதை படுவாளோ? என இருவரும் தவித்து வருந்தி இருப்பார்கள்.

அதிலும் ராமன் தன் தம்பியை பார்க்கும் போதெல்லாம் அவன் கூனி குறுகி செயல் இழந்து தரை பார்த்து நின்றிருப்பான். எது வரை? ஜடாயுவை பார்க்கும் வரை.

ஜடாயுவின் வார்த்தைகள் தேட வேண்டியவர்களை ராமனுக்கு தெளிவு படுத்தும் முன் லட்சுமணனுக்கு நிம்மதி பெரு மூச்சை வர வைத்திருக்கும்.
.ஜாடாயு செய்த உதவி என்பது மிக பெரியது, ராமனுக்கு நேர்ந்த அவமானத்தை துடைக்கும் வழிக்கு ஜடாயு வார்த்தைகளே வழி காட்டி இன்னும் சொல்ல போனால் தந்தை மகனுக்காற்றும் உதவி போல் அவனுக்கு தோன்றி இருக்கவேண்டும். ஜடாயு உருவில் தசரதனை அவன் பார்திருக்க வேண்டும்.

பரதன் தசரதன் இறந்ததை சொல்லி கூப்பிடும் பொழுது அங்கயே அவருக்கு வேண்டிய கிரியைகளை செய்து விட்டு கடந்து வந்த ராமனின் மனம் இங்கு பேதலிக்கிறது.

அவமானமும் இயலாமையும் உட்சத்தில் இருக்கும் பொழுது பெற்றோரை நினைப்பது மனித இயல்பு.

தசரதனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை ஜடாயுக்கு கிடைக்கிறது.
இன்னும் சொல்ல போனால் ஒன்றுக்கு பதில் மற்றொன்று என்பது பரிகாரம் என்ற மனநிலை தான் இது
  .

அதாவது இருக்கும் பொழுது பெற்றோரை தவிக்க விடுவது இறந்த பின்பு 

அமாவாசை விரதம் இருந்து காக்கைக்கு உணவு படைத்து விட்டு சாப்பிடும் 

குணம் தவிர வேறு என்னவாக இருக்க கூடும். 
     
- தொடரும்

Monday 21 October 2013

டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் பரவுகிறது- சுற்றுப்புறம் கவனியுங்கள்!


டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் பரவுகிறது- சுற்றுப்புறம் கவனியுங்கள்!






டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் அதிகப்பேர் செல்ல தொடங்கியுள்ளனர். இதற்கிடையே காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளிக்கும் விதமாக அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.


---- செய்தி






டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?




டெங்கு காய்ச்சல் வைரஸ் கிருமியினால் உண்டாகும் நோயாகும். சில சமயங்களில் நோயின் போக்கு தீவிரமாகும் போது மூக்கு, பல்ஈறு மற்றும் தோலிலிருந்து இரத்தம் வடிதல் உண்டாகும். காபி கொட்டை நிறத்தில் வாந்தியோ அல்லது கறுப்பு நிறத்தில் மலமோ வெளியேறும். இதிலிருந்து வயிற்றுக்குடலினுள் இரத்தம் வடிகிறது எனக் கண்டு கொள்ளலாம்.




டெங்கு காய்ச்சல் மற்றும் இரத்தம் வடிதல் இரண்டுமிருப்பதை டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் என்கிறோம். சில சமயம் நோயாளிக்கு டெங்கு ஷாக் வரலாம்.




நான் எப்போது டெங்கு காய்ச்சல்தானா என சந்தேகிக்க வேண்டும்?


திடீரென்று காய்ச்சல் வரும்போது (103f-105f)
காய்ச்சலுடன் தலைவலி, கண்களில் பின்புறம் வலி, உடம்பு வலி, தோல் சினைப்பு மற்றும் வாந்தி வருதல், வயிறு வலி, சிறு குழந்தைகளுக்கு வலிப்பும் வரலாம்.
காய்ச்சல் 5 நாட்களுக்கு மேல் இருத்தல்
திடீர் திடீரென்று காய்ச்சல் வருதல்.
காய்ச்சல் வந்தபின் மிகவும் அசதியாக இருத்தல்




காய்ச்சலில் நிறைய வகைகள் உள்ளன. எப்போது டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்க வேண்டும்?


கண்களில் பின்புறம் வலி
தசை வலி
மூட்டு வலி
தோலில் சினைப்பு
வயிறு வலி, வாந்தி




டெங்கு காய்ச்சல் மூட்டுகளையும் பாதிக்கின்ற காரணத்தால் அதனை எலும்பு முறிவு காய்ச்சல் எனவும் கூறலாம்.




டெங்கு காய்ச்சல் நேரிடக் கூடிய நோயாளிக்கும் டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்கிற நோயாளிக்கும் உள்ள வேறுபாடு என்ன?




இரத்த அடர்த்தியின் அளவு டெங்கு காய்ச்சல் உள்ள நோயாளிக்கு குறைவாகவே இருக்கும். நோயாளிக்கு இரத்த சோகை இருந்தால் அவை வேறுபடும்.




டெங்கு காய்ச்சல் வந்த நோயாளிக்கு மீண்டும் அந்த நோய் வர வாய்ப்புகள் உள்ளதா?




வர வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் அந்த வைரஸ் கிருமியை சார்ந்த 4 வகை நோய்க்கிருமிகள் உள்ளன. எனவே ஒரு வகை நோய்க்கிருமியினால் உண்டாகக் கூடிய டெங்கு காய்ச்சல் மறுமுறை வேறு வகை நோய்க்கிருமியினால் உண்டாகும். எனவே ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் ஒருமுறைக்கும் மேல் டெங்கு காய்ச்சல் வரலாம்.




டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த ஏதாவது சோதனைகள் உள்ளதா?




நேரிடையாகவோ (அ) மறைமுகமாகவோ ஆய்வுக் கூடங்களில் டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த முடியும். இந்த ஆய்வுகள் டெங்கு தொற்று நோயை உறுதிப்படுத்துகின்றன. மேலும் சில ஆய்வுகளை உபயோகப்படுத்தியும் டெங்கு காய்ச்சலை உறுதி செய்யலாம். ஆனால் அந்த ஆய்வுக்கூடங்கள் முறையான அனுமதி பெற்ற ஆய்வுக் கூடங்களாக இருக்க வேண்டும்.




டெங்கு காய்ச்சல் எவ்வாறு உண்டாகிறது.




கொசுக்கடியின் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகின்றது. எடீஸ் எஜிப்டி வகை கொசுக்கள் இந்த வகை கொசுக்கள் ஒருவித வெள்ளைநிற உடம்பு மற்றும் கால்களுடன் இருக்கும். இதனை ஒரு பாமரன் கூட கண்டுபிடிக்க இயலும். இந்த வகை கொசுக்கள் நீரில் வசிப்பவை. மற்றும் 100-200 மீ வரை, பறக்கும் தன்மை கொண்டவை. இந்த கொசு, டெங்கு காய்ச்சல் உள்ள நோயாளியின் இரத்தம் உறிஞ்சும்போது டெங்கு வைரஸ் கிருமியினையும் பெற்றுவிடுகிறது.




டெங்கு காய்ச்சல் ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுமா?




இல்லை. கொசுக்கடியின் மூலமாக மட்டுமே டெங்கு நோய்க்கிருமி பரவுகின்றது.




நோய் தொற்றியபின் டெங்கு காய்ச்சல் எவ்வாறு உண்டாகிறது?




நோய்க்கிருமி தொற்றியவுடன் அவை நிணநீர் நாளங்களில் பெருக்கம் அடைகின்றன. போதிய எண்ணிக்கையில் பெருக்கம் அடைந்தவுடன் அறிகுறிகளை தோற்றுவிக்கின்றன. இது 4 முதல் 6 நாட்களில் அறிகுறிகள் உண்டாகின்றன.




டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவர் நோயாளிபோல் தோற்றமளிக்காமல் இருப்பாரா?




ஆம். சிலருக்கு இது எவ்வித அறிகுறியையும் உண்டாக்குவதில்லை. எல்லோருக்கும் அல்லாமல் 4 முதல் 5 பேருக்கு அறிகுறிகள் இருப்பதில்லை. மேலும் சிலருக்கு சில அறிகுறிகள் மட்டுமே இருக்கும்.




டெங்கு காய்ச்சலை வீட்டிலேயே குணப்படுத்த முடியுமா?




முடியும். மருத்துவரிடம் ஆலோசித்து வீட்டிலேயே நன்கு ஓய்வெடுத்து நீராகாரங்களும், சுத்தமான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீராகாரங்கள் நிறைய எடுப்பதன் மூலம் டெங்கு இரத்தக்கசிவு நோயையும் தவிர்க்க இயலும். மேலும் அபாய அறிகுறிகளை கண்டவுடன் மருத்துவரிடம் கொண்டு போக வேண்டும்.




டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவ ஆலோசனை என்ன? இதனை குணப்படுத்த முடியுமா?




டெங்கு காய்ச்சலுக்கென தனியாக மருத்துவ சிகிச்சை இல்லை. தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் இதற்கு உதவாது. பாரசிட்டமால் மருந்து காய்ச்சலுக்கும், மூட்டுவலிக்கும் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆஸ்பிரின், பூரூபென் போன்ற மருந்துகளை தவிர்ப்பதன் மூலம் இரத்தக்கசிவினை தடுக்க இயலும். எனவே மருத்துவர்கள் நோயாளிக்கு மருந்துகளை கொடுக்கும்போது கவனமாக இருத்தல் வேண்டும்.




டெங்கு காய்ச்சலினால் அபாயங்கள் உண்டா?




டெங்கு காய்ச்சலினால் இரத்த குழாய்களுக்கு தீங்கு ஏற்படும். இரத்தக்கசிவு. இரத்த அடர்த்தி குறைதல் முக்கியமான உறுப்புகளில் இரத்தம் வடிதல் ஏற்படும்.




டெங்கு காய்ச்சலினால் இறப்பு உண்டாகுமா?




டெங்கு காய்ச்சலினை சரியான சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும். ஆனால் முறையான சிகிச்சை கொடுக்கவில்லையென்றால் இரத்தக்கசிவு நோய் மற்றும் டெங்கு ஷாக் ஏற்படுவதை தடுக்க இயலாது. சிலர் இறக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே டெங்கு காய்ச்சலினை முறையான சிகிச்சையின் மூலம் ஒரு உயிரினை காப்பாற்ற இயலும்.




டெங்கு நோயாளி எப்போது மருத்துவ உதவிக்கு அணுக வேண்டும்?




டெங்கு இரத்தக்கசிவு நோய் உண்டாகும்போது (அ) டெங்கு ஷாக் இருந்தாலும் காய்ச்சல் வந்து 3 முதல் 5 நாட்களுக்குள் மருத்துவரை அணுக வேண்டும். சிலசமயம் காய்ச்சல் இருக்காமல் உடலின் வெப்பநிலை சாதாரண நிலைக்கு வந்துவிடும். இதனால்தான் காய்ச்சல் சரியாகிவிட்டதாக நாம் தவறாக நினைக்கிறோம். எனவே இந்த சமயம்தான் மிகவும் அபாயகரமானது.




மிகவும் வயிற்றுவலி, வாந்தி எடுத்துக் கொண்டே இருத்தல், சிறு சிறு சிவப்பு (அ) ஊதா நிறத்தில் கொப்பளங்கள் மூக்கில் இரத்தம் வடிதல், ஈறுகளில் மற்றும் கழிவுகளில் இரத்தம் வருதல் இவையெல்லாம் அபாய அறிகுறிகள் ஆகும். எனவே மிகவும் வயிற்றுவலி இருந்தாலோ, வாந்தி தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இரத்தக்கசிவு உறுப்புகளில் வரும்வரை பொருத்திருந்தால் அபாயகரமானதாகும்.




டெங்குவிற்கு ஏதாவது தடுப்பூசி இருக்கின்றதா?




ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அறிவியல் ஆய்வுகள் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக தடுப்பூசியினை கண்டுபிடிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு சிலகாலம் பிடிக்கும்.




டெங்கு காய்ச்சினால் நீண்டகால பாதிப்புகள் உண்டா?




1-2 வாரங்களில் முழுமையான குணம் அடைந்து வருவார்கள். சிலருக்கு பல வாரங்களுக்கு அசதிகள் இருக்கும்.




டெங்கு வைரஸை பரப்பும் கொசு எங்கு வாழ்கிறது?




இந்த கொசு, எடீஸ் எஜிப்டி இருட்டு இடங்களிலும் வீட்டை சுற்றிலும் வாழ்கிறது. பெண் கொசு தேங்கி கிடக்கும் நீரின் மேற்பரப்பிலும் வீட்டைச் சுற்றிலும் முட்டையிடுகிறது. இந்த முட்டை 10 நாளில் வளர்ச்சியடைந்து லார்வாக்களை உண்டு செய்யும்.




இந்த கொசு உற்பத்தியாவதை எவ்வாறு தவிர்க்கலாம்?


டெங்கு கொசுக்கள் பகல் நேரங்களில் கடிக்கும். அதிகப்படியாக சூரிய உதயத்தில் இருந்து 2 மணி நேரம் வரையிலும், சூரியன் மறையக் கூடிய மாலை வேளைகளிலும் கடிக்கும்.
முழுக்கை ஆடைகளையும் நீண்ட ஆடைகளை அணிந்து உடலினை நன்றாக மூடுவதன் மூலம் கொசுக்கடியின தவிர்க்க இயலும்.
கொசுவலை, கொசுக்களை கொல்லும் காயில் முதலியவற்றை உபயோகிக்கலாம். குழந்தை மற்றும் முதியவர்க்கு உபயோகப் படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.
கொசுவர்த்தி மற்றும் மின்சார ஆவியாகக் கூடிய மேட்டுகள் உபயோகப்படுத்தலாம்.
கொசு வலை பகலில் தடுக்க மிகவும் நல்லது. தற்போது மருந்து உபயோகப்படுத்திய கொசுவலைகள் மலேரியா காய்ச்சல் தடுப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன.




டெங்கு நோயாளிக்கு அவற்றைப் பரவச் செய்யாமல் தடுக்க ஏதேனும் அறிவுரை உள்ளதா?




டெங்கு காய்ச்சல் அடுத்தவருக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த காய்ச்சல் உள்ள நோயாளி கொசுக்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும். எனவே கொசு விரட்டியை உபயோகிக்கவேண்டும். கொசுவர்த்தி, காயில்கள் போன்றவைகளையும் உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் டெங்கு காய்ச்சலை தவிர்க்க முடியும்.




டெங்கு பரவியுள்ள பகுதிக்கு பயணம் செய்பவற்கு ஆலோசனை உண்டா?
பயணத்தை கட்டுப்படுத்த வேண்டியதில்லை. போதிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.




டெங்கு காய்ச்சல் நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்களின் சிகிச்சை என்ன?




டெங்கு நோய் இருப்பதாக இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.




நோயின் தன்மையை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.




இரத்த அடர்த்தி குறைந்தால் இரத்தம் கொடுக்க வேண்டும். இரத்த அடர்த்தியின் அளவு முன் இருந்ததை விட 20% அதிகரித்தால் இரத்தக் குழாய்களின் மூலம் நீர் சத்தை அதிகரிக்க வேண்டும்.




சிகிச்சையின் போது நோயாளிகள் தவிர்க்க வேண்டியன எவை?




ஆஸ்பிரின் புரூபென், மருந்துகளை சாப்பிடக்கூடாது. இது இரத்தத்திட்டுகளை குறைவு செய்யும். மற்றும் இரத்தக்சிவு உண்டாகும்.




டெங்கு காய்ச்சல் இருப்பதை அறிவிப்பதில் உங்கள் அறிவுரை என்ன?




டெங்கு காய்ச்சல உள்ள நோயாளிகளையும், இருப்பதாக சந்தேகப்படுபவர்களையும் உடனடியாக சுகாதார துறைக்கு அனுப்ப வேண்டும். இரத்தம் சேகரிக்கும்போது, அதனை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை சுகாதார ஆலோசகரின் ஆலோசனை பெற்றபின் செய்ய வேண்டும்.




டெங்கு காய்ச்சலை தடுப்பதில் பொது மக்களின் பங்கு என்ன?




பொது மக்கள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை தவிர்க்க முதலில் கொசு உற்பத்தியினை தடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.




எனவே கொசுக்கள் பறக்கும் வேகம் மிக குறைவாக இருப்பதினால் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சுற்றியிருக்கும் இடங்களை சுத்தம் செய்வதின் மூலம் கொசுக்கள் நீரில் தேங்குவதை தவிர்க்கலாம்.




மிகவும் முக்கியம் – கொசுக்கள் முட்டையிடும் நீர் தேங்குவதை தடுத்தல்




டெங்கு காய்ச்சல் பெருவாரியாக பரவினால் என்ன செய்ய வேண்டும்?




வீட்டைச் சுற்றியுள்ள நீர் தேங்குவதை தவிர்த்தலே மிகவும் முக்கியமான பணியாகும். கொசு மருந்தை தெளிக்க வேண்டும்.






---Author: டாக்டர்.இராஜேந்திரன் நன்றி : தன்னம்பிக்கை




டெங்கு சுரத்திற்கு தடுப்பு மருந்துகள் உள்ளனவா?


ஆங்கில மருத்துவத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை!
சித்த, ஆயுர்வேத மருந்துகள் பயனளிக்கின்றன.
நிலவேம்பு கசாயம் தினம் - காலை / மாலை 30 மிலி வெறும் வயிற்றில் 3 வாரம் தொடர்ந்து பருகினால் டெங்கு உள்ளிட்ட வைரஸôல் பரவும் சுரங்களைத் தடுக்க முடியும்.
ஆயுர்வேதத்தில் அம்ருதாரிஷ்டம் (Amrutha Aristitam) 25 மிலி மருந்து சமஅளவு வெந்நீருடன் கலந்து காலை, மாலை பருகினால் டெங்குவை தடுக்க முடியும்.
சித்த மருந்துகளில் பிரமானந்த பைரவம், வாதசுர குடிநீர் போன்றவை டெங்கு சுரத்தைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகின்றன.
ரத்தத் தட்டணுக்கள் ( PLATELETS) குறையாமல் காக்கவும், அதனை வேகமாக அதிகரிக்கச் செய்யவும் ஆடாதோடை மூலிகை (ஆரம்ப நிலை தட்டணு குறைவு உள்ளபோது - 1 லட்சம் To 11/2 லட்சம் அளவுக்குள் இருக்கும்போது) சாற்றினை சற்று சூடாக்கி தினம் 10 மி.லி. வீதம் 1 வாரம் சாப்பிட்டால் Platelets அதிகரிப்பதைக் கண்கூடாக காணலாம். (ஆடாதோடை பச்சை இலை கிடைக்காவிட்டால்.... பொடியாக, மாத்திரையாக கிடைத்தாலும் பயன் படுத்தலாம்)




(குறிப்பு : Platelets எண்ணிக்கை மிகவும் குறைந்தால் ரத்தம் செலுத்துவது மிகவும் அவசியம்; நல்லது.)




‘டெங்குவை’ அடங்கச் செய்ய ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளனவா?




உலகப்புகழ் பெற்ற சுமார் 25 ஹோமியோபதி மருந்துகள் வரலாறு நெடுகிலும் டெங்கு, சிக்கன் குனியா, பன்றி சுரம், பறவை சுரம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக பயன்பட்டுள்ளன.




1996-ல் டெல்லியில் டெங்கு பேரளவில் தாக்கிய போது அரசின் உத்தரவுக்கிணங்க, டெல்லி மாநில ஹோமியோபதி கவுன்சில் ‘Eupatorium Perf ’ என்ற ஹோமியோபதி மாத்திரையை பல்லாயிரம் பொதுமக்களுக்கு தடுப்பு மருந்தாக வழங்கி முழுவீச்சில் டெங்கு சுரத்தைக் கட்டுப்படுத்தினார்கள். மேலும் டெங்கு சுரம், ரத்த கசிவு டெங்கு சுரம் இரண்டையும் (ஆங்கில மருத்துவத்தில் உரிய மருந்துகள் இல்லாத நிலையில்) ஆற்றல்மிக்க 25 ஹோமியோபதி மருந்துகள் மூலம் குணப்படுத்திக் காட்டினர்.




ஆதாரம் :http:/www.delhihomeo.com/php/treatment/dengu-pre.htm.





by: மருத்துவப் பிரச்சாரச் சங்கம் நன்றி: கீற்று